பாகிஸ்தானில் பிரதமரின் சொகுசு கார்கள் 17-ந் தேதி ஏலம்

பாகிஸ்தானில் பிரதமரின் சொகுசு வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் வரும் 17-ந் தேதி நடக்கிறது. #Pakistan #LaxuryVehicles
பாகிஸ்தானில் பிரதமரின் சொகுசு கார்கள் 17-ந் தேதி ஏலம்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்கு 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.63 ஆயிரம் கோடி) நிதி தேவைப்படுகிறது என அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் பேசிய நிதி மந்திரி ஆசாத் உமர் தகவல் வெளியிட்டார். பாகிஸ்தானில் மாற்றங்களை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து உள்ள புதிய பிரதமர் இம்ரான்கான் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

முதலில் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ பங்களாவில் தான் வசிக்கப்போவதில்லை என அறிவித்தார். தனக்கு 2 ஊழியர்கள் போதும், 2 கார்கள் போதும் என கூறினார்.

பாகிஸ்தான் பிரதமருக்கு நிறைய சொகுசு கார்கள் இருக்கின்றன. அவற்றில் விலை உயர்ந்த 8 பி.எம்.டபிள்யு கார்கள், 4 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், குண்டு துளைக்காத லேண்ட் குரூசர் வாகனங்கள் 4, 2003-2013 மாடல் கார்கள் 8 அடங்கும். இந்த வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏலம் வரும் 17-ந் தேதி இஸ்லாமாபாத்தில் நடக்கிறது.  #Pakistan #LaxuryVehicles 

X

Maalai Malar
www.maalaimalar.com