ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம் - வைர நகைகள் பறிமுதல்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை தேர்தல் பறக்கும் படை போலீசார் பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019
ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்கம் - வைர நகைகள் பறிமுதல்
Published on

சென்னை:

சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரும் வாகன சோதனையை முடுக்கி விட்டுள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு காரில் குவியல் குவியலாக தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்தன. 188.75 பவுன் தங்க நகை காணப்பட்டது. 142.295 கேரட் வெள்ளி நகை இருந்தது. ரூ.75 லட்சம் மதிப்பிலான இந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காரில் இருந்தவர்கள் நகைக்கடைகளுக்கு இந்த நகைகளை எடுத்துச் செல்வதாக கூறினார்கள். இருப்பினும் போலீசார் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை போலீசார் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சோதனையில் காரில் இருந்த 80 வெளிநாட்டு மதுபாட்டில்களும், 4 எல்.இ.டி. தொலைக்காட்சிகளும் பிடிபட்டது.

உடனடியாக பறக்கும் படையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பறக்கும் படை அதிகாரி ஹார்டின் ஓசாரியா காரில் இருந்த வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார், ஸ்டாலின் ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

விமான நிலையத்தில் இருந்து பொருட்களை எடுத்து வந்ததாகவும், வேறு வியாபாரியிடம் விற்பதற்காக கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். ரசீது ஏதும் இல்லாததால் பொருட்கள் அனைத்தையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடுங்கையூர் சகாயம் நகர், ரிஸ்வானி சாலை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி குமார் தலைமையில் வாகன சோதனை நடந்தது. சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ரூ.4 லட்சத்து 24 ஆயிரத்து 460 ரொக்கப் பணம் இருந்தது.

இதுபற்றி காரில் இருந்த கொடுங்கையூரைச் சேர்ந்த டைல்ஸ் கம்பெனி உரிமையாளரிடம் விசாரித்தனர். ஆனால் அவரிடம் பணத்திற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புரசைவாக்கத்தில் ராஜ்பத் ஆசீர் என்பவரிடம் ரூ.1.75 லட்சம் பிடிபட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.8 லட்சத்து 52 ஆயிரத்து 90 மற்றும் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம், 200 அரேபியன் ரியால்ஸ் ஆகியவை சிக்கியது.

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் மற்றும் 86 ஆயிரத்து 25 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அரூரில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 625 சிக்கியது.

மதுரை அய்யர்பங்களா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வேனுக்குள் பெட்டி, பெட்டியாக தங்க கட்டிகளும், நகைகளும் இருந்தன. அவற்றின் எடை 47 கிலோ. மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.

வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை.

அதனால் 47 கிலோ தங்க நகைகள், வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com