காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை பெயர் மாற்றி பா.ஜனதா பட்ஜெட் தாக்கல் செய்கிறது: குஷ்பு

காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை பெயர் மாற்றி பாரதிய ஜனதா அரசு பட்ஜெட் தாக்கல் செய்துவருகிறது என தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு கூறினார்.
காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை பெயர் மாற்றி பா.ஜனதா பட்ஜெட் தாக்கல் செய்கிறது: குஷ்பு
Published on

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் விவரங்களை வெளியில் வராமல் மத்திய பா.ஜனதா அரசு மறைத்து விடுகிறது. ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருவதாக பா.ஜனதா கூறுவதில் உண்மையில்லை. ஊழல் இல்லாத அரசு என்றால் ராஜஸ்தான் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றிருக்க வேண்டும்.


பா.ஜனதா தலைவரான அமித்ஷாவின் மகனுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் எப்படி வந்தது? என்பது குறித்த கேள்விக்கு விடை இல்லாமல் போய்விட்டது.

தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் அதிகம் இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது ஏன்?. அரசு பஸ்கள் அனைத்தும் ஓட்டை உடைசலாக காணப்படுகிறது. அதில் பயணிகள் உயிரை பணயம் வைத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகம் இப்படி இருக்கும் நிலையில் கட்டண உயர்வை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆயிலை மாற்றாமலேயே ஒரு வருடமாக அரசு பஸ்கள் இயக்கப்படுவதாக டிரைவர்கள் கூறுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளார்கள்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காத போது அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லையே. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை பெயர் மாற்றி பா.ஜனதா பட்ஜெட் தாக்கல் செய்துவருகிறது.

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க சட்டங்களை மாற்ற வேண்டும். பாலியல் தொல்லை புகாரில் கைதாகிறவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com