குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை - பாகிஸ்தான் அறிவிப்பு

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் எதற்கும் வாய்ப்பு இல்லை. உள்நாட்டு சட்டப்படிதான் எல்லா முடிவும் எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான்
Published on

இஸ்லாமாபாத்:

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 49), தங்கள் நாட்டில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன் உளவு வேலையிலும் ஈடுபட்டார் என்று பாகிஸ்தான் கைது செய்தது. அவர் மீதான வழக்கை ராணுவ கோர்ட்டு விசாரித்து அவருக்கு 2017-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து நெதர்லாந்தின் திஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டது.

இதை விசாரித்த சர்வதேச கோர்ட்டு, ஜாதவை இந்தியா தூதரக ரீதியில் சந்தித்து பேச வாய்ப்பு தர வேண்டும்; அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து அவரது மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான சட்ட வாய்ப்புகளை பாகிஸ்தான் பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல், இஸ்லாமாபாத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் எதற்கும் வாய்ப்பு இல்லை. உள்நாட்டு சட்டப்படிதான் எல்லா முடிவும் எடுக்கப்படும். ஜாதவ் விஷயத்தில் சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவதில் எந்தவொரு நடவடிக்கையும் அரசியல் சாசனத்தின்படிதான் எடுக்கப்படும்” என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com