கேரள அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தத்திற்கு ஐகோர்ட் தடை

கொரோனா நிவாரணத்துக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்யும் கேரளா அரசின் முடிவுக்கு அம்மாநில ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கேரளா ஐகோர்ட்
கேரளா ஐகோர்ட்
Published on

திருவனந்தபுரம்:

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதி மூலம் நன்கொடை திரட்டப்பட்டு வருகிறது. 

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சாமானியர்கள் என அனைத்துத் தரப்பினரும், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். 

இதற்கிடையே, கேரளாவில் கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பளத்தை 5 தவணைகளாக, அதாவது ஒவ்வொரு மாதமும் 6 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளது. 

இதனை எதிர்த்து அரசு ஊழியர்கள் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை கேரளா ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய மாநில அரசுக்கு உரிமை இல்லை எனக்கூறிய ஐகோர்ட், கொரோனா நிவாரணத்துக்காக அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை பிடித்தம் செய்யும் கேரளா அரசின் உத்தரவுக்கு 2 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com