

சென்னை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 57-வது தேசிய ஓபன் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
வருகிற 28-ந்தேதி வரை நடைபெறும் இந்தப்போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 950 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில் ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரிதுறை முதன்மை தலைமை கமிஷனர் சி.பி.ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீதா ஹரிஷ் தாக்கர், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை ஷைனி வில்சன், அரைஸ் ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு தடகள சங்க பொருளாளர் சி.லதா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
முதல் நாள் போட்டியில் ரெயில்வே சர்வீசஸ் அணி வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். ரெயில்வேயை சேர்ந்த எல்.சூர்யா பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும், சரிதாசிங் குண்டு எறிதலிலும், நீவா நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்றனர். சர்வீசசை சேர்ந்த லட்சுமண் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும், தேஜிந்தர்பால் குண்டு எறிதலும் தங்கம் வென்றனர். இதில் சூர்யா, லட்சுமண் ஆகிய இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள்.
பெண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் ஜினு மரியா மானுவேல் தங்கம் வென்றார். அவர் 1.78 மீட்டர் உயரம் தாண்டினார். மற்றொரு கேரள வீராங்கனை ஏஞ்சல் தேவசியா 1.76 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கமும், ரெயில்வேயை சேர்ந்த சோனு வெண்கல பதக்கமும் பெற்றனர். இன்று 2-வது நாள் போட்டி நடக்கிறது.