

புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் 28-ம் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காவல் முடிந்து இன்று பாட்டியால ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கார்த்தி விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என வாதிட்ட சி.பி.ஐ தரப்பு மேலும் 15 நாட்கள் விசாரணைக் காவலை நீட்டிக்க அனுமதி கேட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரம் தரப்பு, தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்தது. மேலும், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டால், சிறையில் தனக்கு தனி அறை வழங்க வேண்டும் எனவும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தியை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து, அவர் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கடந்த 6-ம் தேதி கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது வரும் 14-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #KartiChidambram #INXMediaCase #CBI #TamilNews