

காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (வயது 82) இன்று காலமானார். அவரது மரணத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், சுரேஷ் பிரபு, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஆன்மீக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மோட்சம் அடைந்துள்ள ஜெயேந்திரருக்கு தனது மரியாதையை செலுத்துவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மனித குலத்தின் நலன்கள் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்காக அவர் அளித்த பங்களிப்பு மற்றவர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டு, ஜெயேந்திரருடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.