

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு வேகப்பந்து வீரர் பும்ரா, சுழற்பந்து வீச்சாளர் யசுவேந்திர சஹால் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
திருவனந்தபுரத்தில் நடந்த கடைசி போட்டியில் 8 ஓவரில் 68 ரன் இலக்கை வைத்து இந்த இருவரும் சிறப்பாக பந்துவீசி அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த நிலையில் பும்ராவும், சஹாலும் டெஸ்ட் அணிக்கு தயராகிவிட்டதாக முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பும்ராவும், சஹாலும் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். இருவரது பந்துவீச்சும் மிகவும் அபாரமாக இருக்கிறது. எதிர் அணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் வீசுகிறார்கள். ஐ.பி.எல். போட்டியில் பெற்ற அனுபவம் முழுவதையும் பயன்படுத்துகிறார்கள். எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த முறையில் எப்படி நேர்த்தியாக வீச வேண்டும் என்பதை இருவரும் நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள்.
அனைவரது இதயங்களையும் கவர்ந்த பும்ரா, சஹால் ஆகியோரை டெஸ்ட் அணியில் சேர்க்கலாம் என்று கருதுகிறேன். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். இருவரும் டெஸ்ட் அணியில் விளையாட தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
23 வயதான பும்ரா 28 ஒருநாள் போட்டி மற்றும் முப்பது 20 ஓவரில் விளையாடி மொத்தம் 92 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.