

இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக பேசப்பட்டது. அதேவேளையில் சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வாலின் ஆட்டம் பேசப்படாமல் போய்விட்டது.
விசாகப்பட்டனத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் மயாங்க் அகர்வால் இரட்டை சதம் (215) விளாசினார். ரோகித் சர்மா சதம் (176) அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்த மயங்க் அகர்வால், முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய வீரர் என்ற சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
2-வது இன்னிங்சில் ரோகித் சர்மா 127 ரன்கள் குவித்த நிலையில், மயங்க் அகர்வால் 7 ரன்னில் வெளியேறினார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. மயாங்க் அகர்வாலின் இரட்டை சதம் எடுபடாமல் போய்விட்டது.
புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ரோகித் சர்மா 14 ரன்னில் வெளியேறிய நிலையில், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் (108) அடித்தார். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (254) அடித்தார். இதனால் விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.