

ஷாங்காய்:
சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை நிலை-1 சாம்பியன்ஷிப் வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், அபிஷேக் வர்மா, சின்ன ராஜு ஸ்ரீதர் மற்றும் அமன்ஜீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி, துல்லியமாக அம்புகளை எய்து முன்னேறியது.
முதல் சுற்றில் வியட்நாம் அணியை இந்திய அணி வென்றது. காலிறுதியில் ஈரானையும், அரையிறுதியில் அமெரிக்காவையும் வென்ற இந்திய அணி, இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் கொலம்பியாவை எதிர்கொண்டது. இப்போட்டியில் 226-221 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது.
பெண்கள் அணி பிரிவில் இந்திய காலிறுதி வரை முன்னேறியது. காலிறுதியில் டென்மார்க் அணியிடம் 223-229 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. இப்பிரிவில் கொரியா தங்கம் வென்றது. டென்மார்க் வெள்ளியும், ரஷ்யா வெண்கலமும் வென்றது.