

புதுடெல்லி :
ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் 0-4 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் கானாவிடம் வீழ்ந்தது. மூன்று லீக்கிலும் தோல்வி அடைந்த இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறியது.
இந்திய பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மாட்டோஸ் கூறுகையில், ‘இரு கடினமான ஆட்டங்களுக்கு பிறகு கானாவுக்கு எதிரான ஆட்டமும் சவால்மிக்கதாக இருக்கும் என்பது தெரியும். என்னை பொறுத்தவரை இந்த குரூப்பில் (ஏ பிரிவு) பலம் வாய்ந்தது கானா அணி தான். அவர்கள் மிகவும் வேகமாக விளையாடக்கூடியவர்கள்.
முதல் பாதியில் நாங்கள் உடல் ரீதியாக சோர்ந்து போய் விட்டோம். உடல்ரீதியாக தளர்ந்து விட்டால், அதன் பிறகு நாம் வகுக்கும் வியூகங்கள் எதுவும் கைகொடுக்காது. அது மட்டுமின்றி அற்பத்தனமான தவறுகளை செய்ய நேரிடும். என்றாலும் எங்களது வீரர்கள் விளையாடிய விதம் பெருமை அளிக்கிறது’ என்றார்.