

புதுடெல்லி:
காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை நிலைகளை குறிவைத்த போது இந்திய ராணுவம் அதிரடியை காட்டியது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு நேரிட்டது.
இப்போது எல்லைக் கிராம மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது. ஜம்மு மாவட்டத்தின் ஆர்னியா, ஆர்.எஸ்.புரா செக்டார்கள், சம்பா மாவட்டத்தின் ராம்கர் மற்றும் கதுவா மாவட்டத்தின் ஹிராநகர் போன்ற செக்டார்களில் அதிகாலையில் இருந்தே பாகிஸ்தான் வீரர்கள் கிராமங்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கி உள்ளனர். இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 3 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
மேலும், டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அந்நாட்டு துணை தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. எல்லையில் நிலவும் தாக்குதல் தொடர்பாக நேரில் விளக்கமளிக்க அதில் கூறப்பட்டுள்ளது.