

மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் மோடி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது இருநாடுகளுக்கும் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. பின்னர், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
நமது இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு அம்சங்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. எனவே, இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அவரை தொடர்ந்து பேசிய மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ், இந்தியாவுடன் இணைந்து இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்வழி, வான்வழி கண்காணிப்பை பலப்படுத்துவது தொடர்பாக இருநாடுகளும் தீர்மானித்துள்ளதாக கூறினார்.