எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு- நெல்லை மாவட்டத்தில் 144 பேர் மீது வழக்கு

கருணாநிதி குடும்பத்தை பற்றி தவறாக கருத்து பதிவிட்ட எச். ராஜா கண்டித்து நெல்லை மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடந்த கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் 144 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எச்.ராஜா கொடும்பாவி எரிப்பு- நெல்லை மாவட்டத்தில் 144 பேர் மீது வழக்கு
Published on

நெல்லை: 

தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்தை பற்றி பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா தவறாக சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டதற்கு தமிழகம் முழுவதும் எச்.ராஜாவின் கொடும்பாவியை தி.மு.க. வினர் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 இடங்களில் எச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. நெல்லை மாநகரில் பாளை பஸ் நிலையம் அருகே டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் கொடும்பாவி எரித்து எச்.ராஜாவை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இதில் டி.பி.எம். மைதீன்கான் உள்பட 10 பேர் மீது பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பாளை வண்ணார்பேட்டையில் கொடும்பாவி எரித்து போராட்டம் நடத்தினர். இதில் அப்துல்வகாப் உள்பட 30 பேர் மீது பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தென்காசியில் நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிவபத்ம நாதன் உள்பட 30 பேர் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபோல களக்காட்டில் 8 பேர், கடையநல்லூரில் 20 பேர், வாசுதேவநல்லூரில் 10 பேர், சிவகிரியில் 10 பேர், திருவேங்கடத்தில் 11 பேர், குருவிகுளத்தில் 15 பேர் மீதும் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் நெல்லை மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் நடந்த கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் 144 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com