நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதிப்பதில் முரண்பாடு- தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சிறையில் உள்ள நளினி, முருகன் ஆகியோரை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்காதது குறித்து தமிழக அரசு பதில் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்,ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாய் பத்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், நளினி, முருகன் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம்  வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் சிறைத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் மூலம் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களிடம், நளினி மற்றும் முருகனை பேச அனுமதிக்க முடியாது, வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 7 பேரை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அரசு உறவினர்களுடன் பேச அனுமதிப்பதில் ஏன் இந்த முரண்பாடு காட்டுகிறது? என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு நாளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையையும் நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com