40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 1½ வயது பேத்தியை காப்பாற்றிய பாட்டி

சென்னை பூந்தமல்லியில் 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 1½ வயது பேத்தியை, பாட்டி உள்ளே குதித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீட்கப்பட்ட குழந்தை மற்றும் அதன் பாட்டி கிருபாவதி.
மீட்கப்பட்ட குழந்தை மற்றும் அதன் பாட்டி கிருபாவதி.
Published on

சென்னை:

சென்னை பூந்தமல்லி கலைமகள் நகர், 1-வது தெருவில் வசித்து வருபவர் கிருபாவதி(வயது 45). இவருடைய மகள் அரிபிரியா. இவருக்கு திருமணமாகி 1½ வயதில் பிரக்யா என்ற பெண் குழந்தை உள்ளது. அரிபிரியா, வேலைக்கு செல்வதால் பேத்தி பிரக்யாவை, கிருபாவதி கவனித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பிரக்யா, திடீரென வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் எட்டிப்பார்த்தபோது, கால் தவறி கிணற்றின் உள்ளே விழுந்து விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருபாவதி, அலறி அடித்தபடி ஓடிச்சென்று சற்றும் யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்தார். பின்னர் தண்ணீரில் மூழ்காமல் பேத்தியை பத்திரமாக மீட்டார்.

கிணற்றுக்குள் தவித்த அவர், கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் இறங்கி, குழந்தையை மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால் கிருபாவதியை கிணற்றுக்குள் இருந்து மேலே கொண்டு வரமுடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி கிருபாவதியை பத்திரமாக மீட்டனர்.

அந்த கிணறு சுமார் 40 அடி ஆழமும், 3 அடி அகலமும் கொண்டதாகும். கிணற்றில் 4 அடி தண்ணீர் இருந்தது. கிணற் றுக்குள் குழாய்கள், மோட்டார் இருந்தது. கிணற்றுக்குள் விழும்போது குழந்தை இதில் எதன் மீதும் மோதாமல் தண்ணீரில் விழுந்துள்ளது.

மேலும் கிணற்றுக்குள் குழந்தை விழுந்த உடன் கிருபாவதியும் உள்ளே குதித்து தனது பேத்தியை காப்பாற்றி விட்டதால் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. கிணற்றுக்குள் குதித்ததில் கிருபாவதிக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கிணற்றில் விழுந்த பேத்தியை அதன் பாட்டி சற்றும் யோசிக்காமல் உள்ளே குதித்து காப்பாற்றிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com