மாதந்தோறும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு திட்டத்தை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் 4 ரூபாய் அளவில் உயர்த்திக்கொள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திருப்பபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாதந்தோறும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு திட்டத்தை திரும்பப் பெறுகிறது மத்திய அரசு
Published on

புதுடெல்லி:

நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மானிய விலையில் 12 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. 

பிரதமர் மோடியின் உஜ்வாலா யோஜானா திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு முன்பணம் இன்றி அளிக்கப்படும் ஒவ்வொரு எரிவாயு இணைப்புக்கும் மத்திய அரசின் சார்பில்1600 ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 3 கோடி குடும்பங்கள் பலனடைந்துள்ளன.

இதனால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடு செய்யும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மாதந்தோறும் முதல் தேதியில் ஒரு சிலிண்டரின் விலையை 4 ரூபாய் அளவுக்கு உயர்த்திகொள்ள பெட்ரோலியத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது.

அவ்வகையில், கடந்த அக்டோபர் மாதம்வரை 17 மாதங்களில் 19 தவணைகளாக மானிய விலை எரிவாயு சிலிண்டரின் விலையில் 76 ரூபாய் 50 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்துக்கு பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. எனவே, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாதந்தோறும் 4 ரூபாய் அளவில் உயர்த்திக்கொள்ள பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திருப்பபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com