பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு- அவசர சட்டம் அமல்

பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100 சதவீத வரிவிலக்கு மற்றும் பல்வேறு வரிகளை செலுத்துவோருக்கான காலக்கெடு நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நிதி சலுகைகள் தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம்
பாராளுமன்றம்
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன. இந்தியாவில் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிதி சலுகைகள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 24ம் தேதி அறிவித்தார். 

வரிகளை செலுத்துவதற்கான காலக்கெடு 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக கூறிய அவர், கொரோனா நிவாரணப் பணிகளுக்கான ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பில் நிதி தொகுப்பையும் அறிவித்தார். இந்த அறிவிப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

இந்த அவசர சட்டத்தின்படி வருமான வரி, ஜிஎஸ்டி தாக்கல் உள்ளிட்டவற்றில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 2018-19-ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் அபராதம் 12 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பிற்கான அவகாசம் மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதற்கான அவகாசமும் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கன கலால் ரிட்டன்களை தாக்கல் செய்வதற்காக கடைசி தேதியும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு தாமதம் மற்றும் அபராதம் விதிக்கப்படாது. பெரும் நிறுவனங்களுக்கான அபராதம் 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

வங்கி வாடிக்கையாளர்கள் அடுத்த 3 மாதங்களில் எந்த ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

பிரதமரின் நிவாரண நிதிக்கு (PM CARES FUND) வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி சட்டம் 80ஜி பிரிவின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த வருமானத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத வரிச் சலுகை வரம்பு, இந்த நன்கொடைக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com