

கவர்னர் கிரண்பேடி அமைச்சரவை குறித்தும், எம்.எல்.ஏ.க்கள் குறித்தும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் டி.வி. சானல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதிலும் எம்.எல்.ஏ.க்கள் பற்றி விமர்சித்து இருக்கிறார். கிரண்பேடி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அடிப்படை ஜனநாயகம் மறுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள நீதிமன்ற உத்தரவின்படி புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
அப்படி தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டால்தான் கிராம, நகர வளர்ச்சிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து அதிக நிதிகளை பெற்று வளர்ச்சி காண செய்ய முடியும்.
மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டால் மக்கள் அவர்களை நேரடியாக சந்தித்து தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
புதுவையில் வாக்களித்த மக்களால் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. எனவேதான் அவர்கள் தங்கள் குறைகளை தீர்ப்பதற்காக என்னை சந்திக்க வருகிறார்கள்.
இவ்வாறு கிரண்பேடி கூறினார்.
மேலும் கிரண்பேடி இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுவை எம்.எல்.ஏ.க்கள் சில பணிகளை செய்தால் புதுவை சுத்தமான நகரமாக மாறும். அனைத்து ஏரி, குளங்களும் சமுதாய ஒத்துழைப்புடன் தூர் வாரப்படும்.
அரசின் குறைந்தபட்ச நிதி உதவியுடன் எதிர்கால தேவைக்கு வேண்டிய தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மழை பொய்த்து விட்டாலும் கூட தண்ணீர் கிடைக்கும்.
எனவே, அனைத்து எம்.எல்.ஏ.க்களும், மூத்த அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அடிமட்ட அளவில் சென்று பணியாற்ற வேண்டும்.
இதன் மூலம் மக்களின் தேவைக்கு தண்ணீரை தேக்கி வைப்பதுடன் விவசாயத்துக்கும் உதவுவதாக இருக்கும். கழிவுநீர் பணிகளும் சிறப்பாக நடக்கும். இத்துடன் அனைத்து ஏரி, குளங்களிலும் மரங்களை நட வேண்டும்.