அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியம்: உயிருடன் நோயாளி - குடும்பத்தினரிடம் இறந்தவர் உடல் ஒப்படைப்பு

அரசு ஆஸ்பத்திரியில் உயிருடன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு பதிலாக அவரது குடும்பத்தினரிடம் அவர் இறந்து விட்டதாக கூறி இறந்த மற்றொருவர் உடல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியம்: உயிருடன் நோயாளி - குடும்பத்தினரிடம் இறந்தவர் உடல் ஒப்படைப்பு
Published on

மும்பை:

மராட்டிய மாநிலம் சங்க்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், அவினாஷ் தாதாசாகேப் பக்வடே (வயது 50) என்பவர் கல்லீரல் கோளாறு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருடைய குடும்பத்தினரை ஆஸ்பத்திரி நிர்வாகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவினாஷ் இறந்து விட்டதாக கூறியது.

அழுதபடி ஆஸ்பத்திரிக்கு சென்ற குடும்பத்தினரிடம், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, துணியால் மூடப்பட்ட ஒரு உடலை ஒப்படைத்தது. ஒரு உறவினர் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியபோது, உடலை பெற்றுக்கொண்டு வெளியேறுமாறு ஆஸ்பத்திரி அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினர்.

அந்த உடலுடன் அவினாஷ் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அஞ்சலி செலுத்த வந்த சில உறவினர்களுக்கு அது அவினாஷ் உடல்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால், முழுமையாக துணியை அகற்றி பார்த்தனர். அப்போது, அது வேறு ஒருவரது உடல் என்று உறுதி செய்யப்பட்டது.

மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, அவினாஷ் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. அவரை இறந்து விட்டதாக கூறியதுடன், வேறு நபரின் உடலை ஒப்படைத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது ஆஸ்பத்திரி சூப்பிரண்டு சுபோத் உகானேவிடம் புகார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதே சமயத்தில், ஒப்படைக்கப்பட்டது யாருடைய உடல் என்பதும் அடையாளம் காணப்படவில்லை. அந்த உடலுக்கு யாரும் உரிமை கோரவில்லை. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com