

சென்னை:
சென்னை மாநகரில் தனியார் பஸ்கள் இயக்கப்படாத நிலையில் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 நாட்களாக போக்கு வரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பஸ் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள் தனியார் பஸ்கள், ஆட்டோக்களை நாடுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புறநகர் பகுதிகளில் ஓடும் தனியார் பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை மாநகரில் ஓடும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஸ்டிரைக் தொடங்கிய முதல் நாள் அன்று ஷேர் ஆட்டோ டிரைவர்கள் 3 மடங்கு கூடுதல் கட்டணத்தை கேட்டு வாங்கினர். ரூ.10-க்கு பதில் ரூ.30 வசூலித்தனர். இதே போல ஆட்டோ டிரைவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலித்து வரு கிறார்கள். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கால் டாக்சி கட்டணங்கள் உயராமலேயே உள்ளது. கால் டாக்சிகளில் எப்போதும் போலவே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பாஸ் ஸ்டிராக் கால் டாக்சி நிறுவனரான ரெட்சன் அம்பிகாபதி கூறும்போது, இதுபோன்ற நேரங்களில் எப்போதுமே நாங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. கடந்த 17 ஆண்டுகளாக இதனை தவறாமல் கடைபிடித்து வருகிறோம் என்றார். #tamilnews #busstrike #governmentbus