

திஸ்பூர்:
அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் உட்பட அனேக பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் மாணவர்கள் படிப்பதற்கு புத்தகங்கள் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட புத்தகங்களுக்கு பதிலாக வேறு புதிய புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயனடைய உள்ளனர். புதிய புத்தகம் வேண்டுபவர்கள் வருகிற 25-ம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை வருகிற 30-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய புத்தகங்கள், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் கல்வித்துறை மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.