மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய விமர்சனம்: தமிழிசை கருத்துக்கு இளங்கோவன் எதிர்ப்பு

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய விமர்சனத்துக்கு எதிரான தமிழிசையின் கருத்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய விமர்சனம்: தமிழிசை கருத்துக்கு இளங்கோவன் எதிர்ப்பு
Published on

ஈரோடு:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவில் தற்போது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பறி போய் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா அரசு.

கலைத்துறையில் குறிப்பாக சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல், ரஜினி, விஜய், அஜித் போன்றோர் தங்கள் படங்களில் ஆளும் கட்சியினரின் குறைகளை தமாசாக கூறுவது வழக்கம்தான். ஆளும் கட்சி தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ, காங்கிரசோ எதுவாக இருந்தாலும் அவர்கள் தங்கள் எதிர் கருத்துக்களை கூறுவது இயல்பு தான்.

ஆனால் விஜய் நடித்து தற்போது வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய விமர்சனம் இடம் பெற்றுள்ளதை தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை குறை கூறி விமர்சித்து இருப்பது நியாயம் இல்லை.

விஜய் சம்பளம் பற்றி கேள்வி எழுப்பி உள்ள தமிழிசை அவரது கட்சியில் உள்ள ஹேமமாலினி உள்ளிட்டோரின் சம்பளம் குறித்து பேசாதது ஏன்? விஜய்க்கு எதிரான தமிழிசையின் கருத்து தனிப்பட்ட நபரின் கருத்து சுதந்தரத்தில் தலையிடுவது போல் உள்ளது.

டெங்கு காய்ச்சல் தமிழக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று கூட சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு நான் சென்றேன். அப்போது கொசுக்கள் அதிகமாக இருந்தது. கொசுக்களை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக ரெயில் நிலையம், பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் தனி நபர்களுக்கு நோட்டீசு வழங்கி அபராதம் விதிப்பதை வரவேற்கிறேன். அதே போன்று பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தவறிய மத்திய, மாநில அரச அதிகாரிகளுகும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலவேம்பு கசாயத்துக்கு எதிர்ப்பு உள்ளதாக நான் கருதவில்லை. டெங்கு காய்ச்சலுக்கு அது மருந்தாக இருக்கும் என நான் கருதுகிறேன். டெங்குவை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை கூறுகிறார். அதை நாம் காதில் வாங்க கூடாது.

தற்போது பல கட்டிடங்கள் இவரது வாடிக்கையாக உள்ளது. இதற்கு காரணம் விதிமுறைகளை முறையாக கடை பிடிக்காததுதான். பணம் கொடுத்தால் போதும் எப்படியும் கட்டிடம் கட்டலாம் என்று ஆகி விட்டது.

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். அரசு பூஜ்யம் அரசாக உள்ளது. ஜி.எஸ்.டி. வரியால் தீபாவளி வியாபாரத்தில் வியாபாரிகள் 60 சதவீதம் நஷ்டம் அடைந்துள்ளனர்.

நான் காங்கிரஸ் தலைவராக இருந்த போது நடிகை குஷ்புவுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. அந்த அட்டை இன்னும் 19 வரும் செல்லும். இது குறித்து கராத்தே தியாகராஜன்ட விபரம் தெரியாமல் பேசுகிறார்.

முதலில் சமூக வலைத்தளங்களில் மோடியை புகழ்ந்து தள்ளிய இளைஞர்கள் தற்போது வசைபாடி வருகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலில் நாங்கள் தி.மு.க.வை ஆதரிப்போம். ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் போட்டியிட்டால் தேர்தல் கமி‌ஷன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஏனென்றால் பணம் பட்டு வாடா செய்ததாக அவர் மீது வழக்கு உள்ளது.

சசிகலாவை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிவரும். மத்திய பா.ஜனதா அரசு இன்னும் ஒரு வருடத்தில் கவிழும். ஏனென்றால் மோடிக்கு அவ்வளவு எதிர்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com