உயர் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் - எடப்பாடி பழனிசாமி தகவல்

உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
உயர் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் - எடப்பாடி பழனிசாமி தகவல்
Published on

சென்னை:

உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டு வேலைகளை செய்யும் போலீசார் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்கு பதிலாக தனியாக அலுவலக உதவியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

துரைமுருகன்:- ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக கருதப்படும் தமிழ்நாடு போலீசால் ஏன் செயின் பறிப்பு திருடர்களைக்கூட பிடிக்க முடியவில்லை?. இந்த மந்த நிலை ஏன்?. அவர்களுக்கு பணிக்கான ஊதியம் இல்லை. பணிப் பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 200 போலீசார் தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அளிக்க வேண்டும். அவர்கள் கொத்தடிமைகள் நிலையில் உள்ளனர். பெரிய அதிகாரிகள் வீட்டில் வேலைக்காரர்களை விட கேவலமான நிலையில் வேலை பார்க்கிறார்கள். இந்த கொத்தடிமை நிலை தீர்ந்தால் போலீசாருக்கு சுதந்திரம் கிடைக்கும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எந்த அரசாக இருந்தாலும் கொலை, கொள்ளை குற்றத்தை எங்கேயும், யாரும் தடுக்க முடியாது. குறைக்க முடியும். தமிழகத்தை பொறுத்தவரை குற்றங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றது. அதற்கு தகுந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்து வருகிறது. இன்றைக்கு சென்னை மாநகரம் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கின்ற மாநகர பகுதிகளில் எல்லாமே சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டு, செயின் பறிப்பை தடுப்பதற்காக, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பதற்காக இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, போலீசார் எல்லாம் உயர் அதிகாரிகள் வீட்டில் பணியமர்த்தப்படுவதாக சொன்னார். அதை எல்லாம் தவிர்ப்பதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர் காவல்துறை அதிகாரிகள் இடத்தில் ஏதாவது இப்படி பணியிலே அமர்த்தப்பட்டால், அவர்களை எல்லாம் விடுவித்து, அவர்களுக்கு பணி செய்வதற்காக தனியாக அலுவலக உதவியாளர்கள் நியமிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com