

புதுடெல்லி:
நேபாளம் நாட்டு எல்லைப்பகுதியில் இருந்து 25 கிலோ எடையுள்ள தங்கம் கடத்திவந்த நபரை டெல்லி ரெயில் நிலையத்தில் வருவாய்த்துறை புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரகசிய தகவலையடுத்து டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று வருவாய்த்துறை புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை மடக்கிப் பிடித்து சோதனையிட்டபோது 25 கிலோ 800 கிராம் தங்கத்தை அவர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுமார் 33 வயதுடைய குற்றவாளியை கைது செய்து விசாரித்தபோது நேபாளம் - இந்தியா எல்லைப்பகுதியில் இருந்து இந்த தங்கம் கொண்டு வரப்பட்டதாகவும், இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் சிக்குவார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.