மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்- மின்வாரியம் வேண்டுகோள்

தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்- மின்வாரியம் வேண்டுகோள்
Published on

சென்னை:

தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

நாளுக்கு நாள் வெயில் தாக்கம் கடுமையாகி வருவதால், பல வீடுகளில் இரவில் மட்டுமின்றி பகலிலும் ஏசி, மின்விசிறி, காற்று குளிர்விப்பான் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளன.

இது மட்டுமின்றி கடைகள், வர்த்தக நிறுவனங்களிலும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைக்கும் குளிர்சாதனப் பெட்டிகளின் பயன்பாடும், அலுவலகங்கள், மென்பொருள் நிறுவனங்களிலும் ஏ.சி.க்களின் பயன்பாடும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலவரப்படி மொத்த மின் பயன்பாடு தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவாக 17 ஆயிரத்து 705 மெகாவாட்டாக அதிகரித்தது.

இந்த தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி, மின் கொள்முதலில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் மின் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும், மின் நுகர்வோர் இந்த மாதிரியான சமயங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com