search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
    X

    விருதுநகர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

    • கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பனை அவரது மனைவி பிரிந்தார்.
    • ஆத்திரம் அடைந்த மாரியப்பன், மகேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரனின் பெரியப்பா மகன் மாரியப்பன்.

    மாரியப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பனை அவரது மனைவி பிரிந்தார். இந்த பிரிவுக்கு மகேந்திரனே காரணம் என்று மாரியப்பன் குற்றம்சாட்டினார். மேலும் இருவரும் உறவினர்கள் என்பதால் அவர்களுக்கிடையே சொத்து தொடர்பான பிரச்சினையும் இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள பொது கிணற்றில் மகேந்திரன் குளிக்க சென்றார். அப்போது அங்கு வந்த மாரியப்பன் மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது முற்றியதால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், மகேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    முகம் மற்றும் கை, கால்களில் பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த விருதுநகர் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட மகேந்திரனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. மகேந்திரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது.

    Next Story
    ×