பள்ளிக்கூடங்களை திறக்க பாதுகாப்பான நிலை நிலவுகிறது- கவர்னர் தகவல்

புதுவையில் பள்ளிகளை திறக்க பாதுகாப்பான சூழ்நிலை நிலவுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்
Published on

புதுச்சேரி:

புதுவை ரோட்டரி சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளி களுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி காராமணிக்குப்பம் முருகன் கோவிலில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்து வருகிறது. இதற்கு நான் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் இணைந்து பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் எச்சரிக்கையுடன் முடிவுகளை எடுத்து சூழ்நிலைகளை சமாளிக்கும் முன் உதாரணத்தை காட்டியுள்ளோம்.

எங்களது நடவடிக்கைகளை நிறைய பேர் விமர்சித்தார்கள். ஆனாலும் மிகவும் கவனமுடன் முடிவுகளை எடுத்ததால் நிலைமைகளை சமாளித்துள்ளோம். இன்னும் 4-வது அலைகூட வரலாம். இந்த முறை அதிக பாதிப்பு, உயிரிழப்பு இல்லை. இதற்கு தடுப்பூசிதான் காரணம்.

பல நாடுகளில் தடுப்பூசி கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். நமது நாட்டில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான சொட்டு மருந்தும் தயாராகி வருகிறது.

புதுவையை சேர்ந்த தவில் வித்வானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இப்போது சிபாரிசு இல்லாமல் எளியவர்களுக்கும் விருதுகள் கிடைக்கிறது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரு விதமான கல்வி திட்டம்தான் கடைபிடிக்கப்படுகிறது. இங்கு பாதுகாப்பான நிலைதான் உள்ளது. எனவே பள்ளிகளை திறப்பது நல்லது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்துபேசி அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com