search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    த.மா.கா. சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்- ஜி.கே.வாசன்
    X

    த.மா.கா. சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்- ஜி.கே.வாசன்

    • ஆட்சியாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும்.
    • தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், பெரிய ஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாச ரெட்டியார்-சரோஜம்மாள் மகன் எஸ்.சதீஷ்குமார், இலுப்பூர் கிராமத்தை சேர்ந்த சேதுராமன் நாயக்கர்- பரிமளா மகள் எஸ்.ஹேமலதா ஆகியோரது திருமணம் இன்று காலை பெத்திகுப்பம் கேட் ஜே.எப்.என். பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. பெரிய ஓபுளாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட த.மா.கா. தலைவருமான எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.

    பெரிய ஓபுளாபுரம் எஸ்.தமிழ்மணி, கொசவன்பேட்டை ஆர்.கே.ராஜேந்திரன், கொப்பூர் ஜி.மணிவண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு கூறியதாவது:-

    தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் தலையில் பல்வேறு சுமைகளை சுமத்தி உள்ளனர். குறிப்பாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என பல்வேறு சுமைகளை மக்கள் தலையில் ஆட்சியாளர்கள் சுமத்தி உள்ளனர்.

    மேலும், தமிழகத்தில் குண்டு வெடிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. காவல்துறை உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது கோவை கார் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாகும். ஆட்சியாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

    இதனால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பால் விலை உயர்வு என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பால் விலையை குறைக்க வலியுறுத்தி சென்னையில் த.மா.கா சார்பில் விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்த ராஜன், த.மா.கா மாநில செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, மாநில நிர்வாகிகள் திருவேங்கடம், ஆத்தூர் தாஸ், வட்டார தலைவர்கள் அசோகன், என்.ஆர்.கே.தாஸ், இளைஞரணி மாவட்ட தலைவர் செந்தில் குமார், சுண்ணாம்புகுளம் ஊராட்சி மன்ற ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷாரவி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோபிநாத், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரமேஷ், ஆரணி பேரூர் தி.மு.க. செயலாளர் பி.முத்து மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    Next Story
    ×