கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி- சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் கடற்கரை வெறிச்சோடியது.
கடற்கரை சாலை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை காணலாம்
கடற்கரை சாலை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை காணலாம்
Published on

புதுச்சேரி:

புதுவையில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிவார்கள். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை முதலே புதுவை நகரம் களைகட்டத் தொடங்கிவிடும். எங்கு பார்த்தாலும் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டமும் இருக்கும்.

புதுவையில் தற்போது கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் இந்த வாரம் சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

புதுவையில் கொரோனா பாதிப்பு தேசிய அளவை விட அதிகமாக இருப்பதால், இங்கு வர வெளிமாநில சுற்றுலா பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர். வெள்ளிக்கிழமையான நேற்று மாலை வெளிமாநிலத்தவர் ஒரு சிலரின் நடமாட்டம் மட்டுமே நகர பகுதியில் பார்க்க முடிந்தது. வழக்கமாக வார இறுதி நாட்களில் ஓட்டல்களில் அறை கிடைப்பதே அரிதாக இருக்கும். ஆனால் இந்த வாரம் பெரும்பாலான ஓட்டல்களில் அறைகள் காலியாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் புதுவை கடற்கரை, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, பாண்டி மெரினா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி இருந்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com