search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.127 கோடிக்கு சொத்து குவிப்பு: முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.127 கோடிக்கு சொத்து குவிப்பு: முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

    • காமராஜ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • 6 பேர் மீது 810 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை திருவாரூர் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.

    தற்போது நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து மொத்தம் ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    காமராஜர் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோரின் உடந்தையுடன் தஞ்சாவூரில் என்.ஏ.ஆர்ச் ஓட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சொத்துக்களை வாங்கி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அவரது மகன்களான இனியன், இன்பன் ஆகியோரின் பெயர்களில் தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் (ஸ்ரீவாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் லிமிடெட்) என்ற பெயரில் நவீன பன்னோக்கு மருத்துவமனையை கட்டியதும் தெரிய வந்தது.

    இந்த வகைகளில் ரூ.127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 அளவிற்கு தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளார்.

    இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர சபாநாயகரிடம் அனுமதி பெற்று இன்று திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறப்பு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் சந்திரகாசன், கிருஷ்ண மூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும் போது, இது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அனைவர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×