மங்களூருவில் கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர்- மகன் கோர்ட்டில் ஆஜர்

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர் மற்றும் அவரது மகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.
குவாரி உரிமையாளர்- மகன் கோர்ட்டில் ஆஜர்
குவாரி உரிமையாளர்- மகன் கோர்ட்டில் ஆஜர்
Published on

நெல்லை:

நெல்லை அருகே அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14-ந்தேதி பாறை சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய 6 பேரில் முருகன், விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். செல்வம் மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாறை இடிபாட்டில் சிக்கிய தச்சநல்லூர் ஊருடையார் புரத்தை சேர்ந்த ராஜேந்திரனை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று 7-வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று 32 இடங்களில் துளையிட்டு ஜெலட்டின் குச்சிகளை வைத்து வெடி வெடிக்க செய்தனர். ஆனால் பாறைகள் பெரிய துண்டுகளாக கீறி இருந்ததால் இன்று விரிசல் ஏற்பட்டுள்ள அந்த பாறைகளில் 2-வது நாளாக சிறிய அளவிலான மருந்து கொண்ட ஜெலட்டின் குச்சிகளை வைத்து வெடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இன்று பாறைகளில் துளையிடும் பணி காலையில் நடை பெற்றது.

அதன் பின்னர் அந்த துளைகளில் மருந்துகளை வைத்து வெடிக்க செய்ய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிருடன் மீட்கப்பட்ட 2 பேரும், ராஜேந்திரன் லாரி கேபினில் இருந்தார் என்று தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில் அந்த லாரியின் கேபினை இரும்பு கட்டர் மூலமாக உடைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அதன் மீது அதிகளவு பாறை குவியல்கள் கிடப்பதால் அதன் மீது தற்போது வெடி வைத்து தகர்க்கும் முயற்சி கையில் எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துர்நாற்றம் வீசும் இடமும் கண்டறியப்பட்டு அங்கு மீட்பு பணியை தொடர உள்ளதாக பேரிடர் மீட்பு குழுவின் துணை கமாண்டன்ட் சுதாகர் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே கல்குவாரி விபத்து வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரியின் உரிமையாளரான திசையன்விளையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

அவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பதை அறிந்த தனிப்படையினர் அங்கு சென்று செல்வராஜ், குமாரை கைது செய்தனர். பின்னர் வேன் மூலமாக நெல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று நெல்லைக்கு கொண்டு வரப்பட்ட அவர்கள் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com