search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் இன்று மாலை அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம்- முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்
    X

    கரூரில் இன்று மாலை அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம்- முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்

    • கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கண்டன பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார். 

    கரூர்:

    கரூர் மாவட்ட ஊராட்சி குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சம பலத்துடன் இருந்தன.

    மாவட்ட ஊராட்சி குழுத்தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் துணைத்தலைவர் பதவி தொடர்ந்து காலியாக இருந்தது.

    இந்த பதவிக்கான தேர்தல் பல்வேறு காரணங்களால் 6 முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் துணைத்தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் திருவிகாவும், தி.மு.க. சார்பில் தேன்மொழியும் போட்டியிட திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் 9-வது வார்டு கவுன்சிலர் திருவிகா சென்ற கார் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தி, கவுன்சிலரை கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. தேர்தல் முடிந்த பின் அவர் விடுவிக்கப்பட்டார். தன்னை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்துக்கு புறம்பாக நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என்றும் அ.தி.மு.க. வேட்பாளர் திருவிகா கூறினார்.

    இதற்கு மறுநாள் (20-ந்தேதி) கரூர் அருகே கோதூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் சிவராஜ் (45) என்பவரை கரூர்-ஈரோடு சாலையில் வேலுசாமிபுரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது காரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து கடத்தி சென்றது. பின்னர் அவர் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தி.மு.க.,வினரின் அராஜக செயல்களை கண்டித்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று கண்டன பொதுக்கூட்டம் கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.

    இதில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றுகிறார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, சின்னசாமி, கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் திரளானோர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×