கோவையில் 10-ம் வகுப்பு மாணவி படுகொலை - சாக்கு மூட்டையில் கட்டி முள்புதரில் உடல் வீச்சு

கோவையில் 10-ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி முள்புதரில் உடல் வீசப்பட்டது.
கார்த்திகா
கார்த்திகா
Published on

கோவை:

கோவையை அடுத்த சரவணம்பட்டி சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டம் மாருதி நகரில் உள்ள முள்புதரில் நேற்று சாக்குமூட்டையில் ஒரு சிறுமி அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டாள். அவள் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியின் உடல் கிடந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கும் கலைவாணி என்பவர் தனது மகள் கார்த்திகாவை(வயது 15) கடந்த 11-ந் தேதி முதல் காணவில்லை என்று புகார் கொடுத்திருந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கலைவாணியை போலீசார் சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர் இறந்து கிடப்பது தனது மகள் கார்த்திகா தான் என்று அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், கலைவாணி தனது கணவர் ராஜேந்திரனை பிரிந்து 2 மகள்களுடன் வசித்து வருவதும், பிணமாக மீட்கப்பட்ட அவருடைய 2-வது மகள் கார்த்திகா சரவணம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது

அந்த மாணவியின் செல்போன் எண்ணில் இருந்து யாரிடம் கடைசியாக பேசினார் என்று ஆய்வு செய்யப்பட்டது. இதில் அந்த மாணவி, காணாமல் போனதற்கு முன்னதாக உறவினர்களிடம் பேசியது தெரியவந்தது.

மாணவியின் தாய் கலைவாணி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்களின் வீட்டுக்கு வந்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவியின் தாய் கலைவாணியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவியின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனைக்கு பிறகே எப்படி கொலை செய்யப்பட்டார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த கொலையில் துப்புத்துலக்கி கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com