

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருமான அனில்மேஷ்ராம் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அவர்கள் உணவினை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்தும், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருட்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து, உணவு பொருள் சேமிப்பு அறை, சமையல் செய்யும் அறை மற்றும் உணவருந்தும் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? எனவும், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா? என்பது குறித்தும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, சிறப்பு தூர்வாரும் பணிகளில் ஒன்றான நாரணமங்கலம் முதல் வரகுபாடி ஏரி வரை உள்ள வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முடிவுற்றுள்ள பகுதியினை பார்வையிட்டார். நாரணமங்கலம் முதல் வரகுபாடி வரையிலான 4 ஆயிரம் மீட்டர் நீளம் வரத்து வாய்க்கால் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் வரகுபாடி ஏரியில் ஆயக்கட்டு 63.13 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு கிணறுகளில் நீர் செரியூட்டு மூலமும் பாசன வசதி மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. துார்வாரப்பட்டுள்ள வாய்க்கால்களின் கரைகளில் மேய்ச்சல் நிலங்களை உருவாக்குவதற்கும்,
கால்நடைகளுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த பசுந்தீவனம் உற்பத்தி செய்திடவும், மண் அரிப்பை தடுக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமான துார்வாரப்பட்டுள்ள வாய்க்கால் கரைகளில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கொழுக்கட்டை புழு 3 பங்கும், ஒரு பங்கு முயல் மசால் கலந்த தீவன விதைகள் விதைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.