ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதைதிரையுலகினரின் வாழ்த்து காணொலி திரையிடப்பட்டது.
ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அ.தி.மு.க. சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழா நாதகான சிகாமணிகளான சகோதரர்கள் தி.ச. பாண்டியன் தி.ச. சேதுராம் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. முன்னாள் அமைச்சர் பொன்னையன் வரவேற்று பேசினார்.

அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் ஜானகி அம்மையாரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் குத்து விளக்கு ஏற்றி வைத்து ஜானகி அம்மை யாரின் உருவப் படத்தை திறந்து வைத்தார். இந்த படம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகி அம்மையாருடன் பயணித்த நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி, உள்ளிட்ட வர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

அ.தி.மு.க. வரலாறு மற்றும் ஜானகி அம்மையாரின் வாழ்க்கை வரலாறுடன் இணைந்த குறும்படம் திரையிடப்பட்டது. இதன் பின்னர் சினிமா புகழ் அபிநயா நாட்டியக் குழுவினரின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. இந்த நடனம் முடிந்ததும் நடிகர் தம்பி ராமையா மேடையில் பேசினார்.

அதனை தொடர்ந்து நடந்த கவியரங்கில் , மக்கள் திலகத்தின் மனையரசி என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா பேசினார். மனங்களை கவர்ந்த மாதரசி, என்ற தலைப்பில் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் நந்தலாலா, மக்கள் தொண்டில் சிறந்த பேரரசி என்ற தலைப்பில் கவிஞர் ஆதிரா முல்லை ஆகியோரும் ஜானகி அம்மையாரின் பெருமைகளை பேசினார்கள். இதன் பிறகு லட்சுமன் ஸ்ருதி குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது

ஜானகி அம்மையார் கற்றுக்கொண்டது தாய்மைப் பாசமா? தலைமை பண்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும், சினிமா புகழ் நாட்டுப்புற இணையர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் கிரா மிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து திரையுலகினரின் வாழ்த்து காணொலி திரையிடப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து செய்தியும் இடம் பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். பேசும் குறும்படம் திரையிடப்பட்டது.

முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக ஸ்ரீவாரு மண்டப வளாகத்தில் நடைபெற்ற ஜானகி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மாலை 5 மணி அளவில் அவர், தலைமை எழுச்சி உரையாற்றுகிறார். இறுதியாக முன்னாள் அமைச்சர் வளர்மதி நன்றி கூறுகிறார்.

ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவையொட்டி மண்டபத்தை சுற்றியுள்ள பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. அ.தி.முக் கொடிகள் கட்டப்பட்டு வாழை தோரணங்களால் சாலையின் இரு புறமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி வரவேற்று அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com