search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து ஆய்வு
    X

    தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து ஆய்வு

    • தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
    • இது குறித்து நாங்கள் இன்று தனியார் பஸ்களில் ஆய்வு செய்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோட்டில் நேற்று தினம் முதல் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் தனியார் பஸ்களில் ரூ.2 முதல் ரூ.7 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்புமின்றி உயர்த்தப்பட்ட இந்த கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறியதாவது:

    தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தவில்லை. சில பஸ்களில் சில்லறை இல்லை என்பதால் ரூ.1, ரூ.2 தராமல் இருந்திருப்பார்கள். நாங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது.

    இது அரசின் கொள்கை சார்ந்த முடிவாகும். அரசு அறிவித்தால் மட்டுமே உயர்த்தலாம். தற்போது ரூ.1, ரூ.2, ரூ.5 சில்லரை தட்டுப்பாடாக உள்ளது. சில்லரையை நாங்கள் கமிஷன் கொடுத்து வாங்குகிறோம்.

    டீசல் ஒரு லிட்டர் ரூ.65 இருந்தபோது பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றாலும் இதர செலவுகள் அதிகரித்து ள்ளதால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும்பாலும் நஷ்டத்தை தான் சந்தித்து வருகின்றனர். தங்களது கை காசுகளை போட்டு பஸ்களை இயக்கி வருகின்றனர் என்றனர்.

    தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு குறித்து கேட்டபோது ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவை நாதன் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து தனியார் பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இது குறித்து தெரிவித்து அரசு உத்தரவு இல்லாமல் பஸ் கட்டணம் நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளோம். இன்று முதல் பழைய கட்டணம் வசூலிப்பதாக எங்களிடம் கூறியுள்ளனர்.

    இது குறித்து நாங்கள் இன்று தனியார் பஸ்களில் ஆய்வு செய்கிறோம். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வது கண்டறிய ப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×