தேர்தல் தோல்வி: சேலம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
தேர்தல் தோல்வி: சேலம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
Published on

சேலம்:

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

மேலும் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தேனி, ராமநாதபுரம், வேலூர், தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வசம் உள்ளது. அப்படி இருந்தும் சேலம் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.

அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தார்.

இதையடுத்து முதல் கட்டமாக சேலம், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (8-ந்தேதி) ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com