கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் சோதனை- ரூ.2.65 கோடி பணம், 6.63 கிலோ தங்கம் பறிமுதல்

கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேடான வழியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.
கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்
Published on

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.  சென்னை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார்  57 இடங்களில் இன்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

கே.பி.அன்பழகன் வீட்டில் அனைத்து அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வீட்டு வளாகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களை எடுத்து போலீசார் சரிபார்த்தனர். அந்த ஆவணங்கள் தொடர்பாக வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சோதனைகளில் கணக்கில் வராத ரூ.2.65 கோடி பணம், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2016-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையில் கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேடான வழியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தது.

இதன் அடிப்படையிலேயே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி (சந்திரமோகனின் மனைவி) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடைபெற்று உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com