மக்கள் நலத்திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்றியது? உதயநிதியுடன் விவாதிக்க தயார் -ஜெயக்குமார்

உதயநிதி ஸ்டாலின் நஞ்சை கக்கி இருக்கிறார்.உதயநிதிக்கு நாவடக்கம் தேவை.
மக்கள் நலத்திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்றியது? உதயநிதியுடன் விவாதிக்க தயார் -ஜெயக்குமார்
Published on

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியத் திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லை என்று கூறிவிட்டு, கருணாநிதியை தமிழகத்தின் நவீன கால சிற்பி போன்று உருவகப்படுத்துவதற்காக பன்னாட்டு அரங்கம், கடலில் பேனா சிலை போன்ற மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு மக்களுக்கு பயன் அளிக்காத திட்டங்களுக்கு செலவிடப்படுவதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தலின்போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்து வருகிறது என்றும் தெரிவித்தார். இது சரிதானே...

42 மாத தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கான புதிய திட்டங்கள் ஏதுமில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சாதனைகளை பொதுவெளியில் விவாதம் செய்யத் தயார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா? என்று கேட்டதற்கு, இதுவரை வாய் திறக்காத மு.க.ஸ்டாலின், தன் மகன் உதயநிதியை உசுப்பிவிட்டு வாய் நீளம் காட்டியிருக்கிறார்.

ஊரில் தங்களைப் பாராட்ட யாருமில்லை என்ற காரணத்தால் தந்தை மகனை புகழ்வதும், மகன் அப்பாவை சீராட்டுவதும் என்று மேடைக்கு மேடை இவர்கள் நடத்தி வரும் நாடகத்தை எடப்பாடி பழனிசாமி எடுத்து வைத்ததால் கோபம் கொப்பளிக்கிறதோ? உதயநிதி ஸ்டாலின் நஞ்சை கக்கி இருக்கிறார்.

அரசியலில் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. தி.மு.க.வை தற்போது முன்னின்று நடத்துபவர்போல் ஒட்டுண்ணிகள் அல்ல நாங்கள். தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நப்பாசையில் உதயநிதி ஸ்டாலின் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறக்கூடாது. அவருக்கு நாவடக்கம் தேவை.

57 ஆண்டு திராவிட ஆட்சிக்கால வரலாற்றில், தமிழக மக்கள் நலனுக்குரிய திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்றியது அ.தி.மு.க. ஆட்சியா? அல்லது தி.மு.க.வின் ஊழல் ஆட்சியா? என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க, உதயநிதி தயாரா? அவரோடு விவாதிக்க நான் தயார். இடம், நாள், நேரத்தை அவரே தீர்மானிக்கட்டும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com