search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையம் அருகே குட்டையில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவர் பலி
    X

    பெரியநாயக்கன்பாளையம் அருகே குட்டையில் மூழ்கி 6-ம் வகுப்பு மாணவர் பலி

    • தாழ்வான இடங்களிலும், குட்டைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்,

    கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏராளமான குளங்கள் நிரம்பி உள்ளன. தாழ்வான இடங்களிலும், குட்டைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இந்தநிலையில் கோவையில் குட்டையில் குளிக்கச் சென்ற மாணவர் ஒருவர் பலியானார். பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜெரிஜோஸ்வான் (வயது 11). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று அந்த பகுதியில் மழை பெய்ததால் ஜெரி ஜோஸ்வான் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்கள் சிலர் அங்குள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றனர். அவர்களுடன் ஜெரிஜோஸ்வானும் சென்றார்.

    குட்டையில் இறங்கி அவர் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தார். ஆழமான பகுதிக்கு சென்ற ஜெரிஜோஸ்வான் நீரில் மூழ்கினார். அவரை மீட்க நண்பர்கள் போராடினர். பின்னர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி தேடினர். அதற்குள் ெஜரிஜோஸ்வான் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாணவரின் உடலை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு அழுதது உருக்குவதாக இருந்தது.

    இதற்கிடையே மழை வெள்ளத்தில் சிக்கிய மற்றொரு நபரை தீயணைப்பு வீரர்கள் 3-வது நாளாக தேடி வருகிறார்கள். கோத்தகிரி சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 18). டிப்ளமோ பட்டதாரி. கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    பெரியநாயக்கன்பாளை யம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம்பாளைம் பகுதியில் வசிக்கும் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதாப் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

    அங்கு ரெயில்வே பாலத்தின் அடியில் சென்ற மழை வெள்ளத்தை கடக்க முயன்றார். அப்போது வெள்ளம் அவரை இழுத்துச் சென்றது. அவரது கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தீயணைப்பு வீரர்கள் இன்று 3-வது நாளாக தேடினர்.

    Next Story
    ×