கோவையில் ஏசி விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு

குறைவான வருமானம் கொண்டவர்களும் ஏசி வாங்கும் சூழல் உருவாகி உள்ளது.தற்போது 500 முதல் 2000 வரை ஏசி எந்திரங்கள் விற்பனையாகி உள்ளது.
கோவையில் ஏசி விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு
Published on

கோவை:

தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதமான தட்ப வெப்பநிலை நிலவும் கோவை மாவட்டத்தின் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.

பகல் நேரங்களிலும் வெப்ப அலை வீசுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கோடை வெயில் காரணமாக புழுக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் ஏர் கண்டிஷன் வாங்குவோரின் எண்ணிக்கையும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதே வேளையில் ஏர் கூலர்கள் டவர் பேன்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஏசி, ஏர் கூலர்கள் விற்பனை செய்யும் கடையினர் கூறியதாவது:-

கோடை வெயில் காரணமாக கோவையில் ஏசி விற்பனை அதிகரித்துள்ளது. ஏசி எந்திரங்களை நடுத்தர மக்கள் வாங்கி வந்த நிலை மாறி குறைவான வருமானம் கொண்டவர்களும் ஏசி வாங்கும் சூழல் உருவாகி உள்ளது.

1 டன் ஏசி ரூ.30 ஆயிரம் முதல் கிடைக்கி றது. தவணை முறையில் கடனை திருப்பி செலுத்தும் வசதி இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ஏசி வாங்குவது உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் மாதம் 800 முதல் 1300 ஏசி எந்தி ரங்கள் விற்பனையாகி வந்தன. தற்போது நடப்பாண்டில் 1500 முதல் 2000 வரை ஏசி எந்திரங்கள் விற்பனையாகி உள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஏசி விற்பனை 3 மடங்காக அதிகரித்துள்ளது.

ஏசி எந்திரங்களின் தேவை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இதனால் ஏசி எந்திரங்களின் இருப்பு குறைந்து விற்பனையும் பாதித்துள்ளது. மேலும் ஏசி எந்திரங்கள் நிறுவ 7 நாட்கள் ஆகின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஏசி டெக்னீசியன்கள் கூறும்போது வெளியில் இருக்கும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப ஏசி அளவை வைக்க வேண்டும். 25 டிகிரி செல்சியஸ் வைப்பது தான் சிறந்தது. அறைக்கு தேவையான குளிர்ச்சியை தருகிறது. மின் சேமிப்பையும் உறுதி செய்கிறது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com