சபாநாயகரை விமர்சிக்க பாஜகவினருக்கு தகுதி இல்லை- தினேஷ் குண்டுராவ்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் ரமேஷ்குமாரை விமர்சிக்க பா.ஜனதாவினருக்கு தகுதி இல்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறினார்.
தினேஷ் குண்டுராவ்
தினேஷ் குண்டுராவ்
Published on

பெங்களூரு :

பெங்களூரு விதானசவுதாவில் கர்நாடக காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவை பா.ஜனதாவினர் விமர்சனம் செய்கிறார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது எதற்காக பா.ஜனதாவினருக்கு பாசம் என்பது புரியவில்லை. சபாநாயகரின் இத்தகைய நடவடிக்கை கட்சி தாவலில் ஈடுபடுபவர்களுக்கான எச்சரிக்கை. இதனால் பா.ஜனதாவினர் சபாநாயகரின் தீர்ப்பை வரவேற்க வேண்டும். அதை விட்டுவிட்டு மானம், மரியாதை இல்லாமல் சபாநாயகரை விமர்சனம் செய்வது சரியல்ல.

பா.ஜனதா ஆட்சியில் சபாநாயகர் கே.ஜி.போப்பையா சட்டவிரோதமாக தீர்ப்பு வழங்கினார். இத்தகைய சூழ்நிலையில் சபாநாயகர் ரமேஷ் குமாரை விமர்சனம் செய்ய பா.ஜனதாவினருக்கு எந்த தகுதியும் இல்லை.

எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரஸ் சார்பில் பிறப்பிக்கப்பட்ட கொறடா உத்தரவு, கொறடா உத்தரவுக்கான விரிவான அர்த்தம் குறித்து சித்தராமையா சட்டசபையில் பேசினார். அப்போது எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதாவினர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பிறப்பிக்கப்பட்ட கொறடா உத்தரவை விமர்சனம் செய்தனர். ஆனால் தற்போது பா.ஜனதா கட்சியினர் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளனர். பா.ஜனதாவினருக்கு அதிகார ஆசை உள்ளது. எடியூரப்பாவுக்கு முதல்-மந்திரி பதவி மீது ஆசை. இதற்காக அவர்கள் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com