தினகரன் ஆதரவாளர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்: ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ். அணிகள் தீவிரம்

தினகரன் ஆதரவாளர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்: ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ். அணிகள் தீவிரம்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமிக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
Published on

சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற பின்னர் அவரது ஆதரவாளர்களை நீக்குவதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நிர்வாக வசதிக்காக அ.தி.மு.க.வில் 50 மாவட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த 50 மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் உள்ளனர். இதில் தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தினகரன் ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2500-க்கும் மேற்பட்டோர் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி நீக்கப்பட்ட தினகரன் ஆதரவாளர்களுக்கு பதில் புதிய நிர்வாகிகளை நியமிக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இதனால் புதிய பதவிகளை பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான பதவிகளை பிடிப்பதற்கு அ.தி.மு.க.வில் உள்ள தங்களது ஆதரவாளர்களை கட்சியினர் நாடியுள்ளனர்.

புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு ஒன்றும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினரிடம் யார்- யாரை நிர்வாகிகளாக நியமிக்கலாம் என்பதுபற்றி பட்டியல் தருமாறு கட்சி மேலிடம் கேட்டுள்ளது. இதனை ஏற்று குழுவினர் புதிய நிர்வாகிகளுக்கான பரிந்துரை பட்டியலை விரைவில் அளிக்க உள்ளனர்.

இதன்பின்னர் அ.தி.மு.க. வில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல் (வட சென்னை), பார்த்திபன் (வேலூர் கிழக்கு), தங்கத் தமிழ்செல்வன் (தேனி), ரெங்கசாமி (தஞ்சை வடக்கு), கலைராஜன் (தென் சென்னை), பாப்புலர் முத்தையா (நெல்லை) ஆகிய 6 பேரும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாகவும், புதிதாக 6 மாவட்ட செயலாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த மாவட்டச் செயலாளர் பதவியை பிடிப்பதற்கும், அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வரிந்து கட்டி செயல்படுகிறார்கள்.

இதுபற்றி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அணிகள் இணைந்த பின்னரும் எங்கள் ஆதரவு நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக நடந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாவட்டங்களில் அந்த நீக்கம் உள்ளது. அதன்பின் காலியாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com