தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். நடவடிக்கை

தினகரன் ஆதரவாளர்கள் 100 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். நடவடிக்கை

கோவை-சேலம்-நீலகிரி, நாமக்கல்லில் தினகரன் ஆதரவாளர்கள் 100 பேரை அதிரடியாக நீக்கி அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Published on

சென்னை:

கோவை, சேலம், நீலகிரி, நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் 100 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கோவை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சாந்தலிங்க குமார், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. ரோகிணி (எ) கிருஷ்ணகுமார்,

சூலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ராஜசேகர், ஆனைமலை பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ரஹமத்துல்லா, மதுக்கரை ஒன்றியம் டாக்டர் ராஜாராம், ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோல் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளான அன்பழகன், அன்புசெழியன், கந்தசாமி, மற்றும் பல்வேறு நிர்வாகிகளும், சேலம் மாநகர் மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாஜலம் உள்ளிட்ட நிர்வாகிகளும், நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட அணி தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் நீக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com