ஈரோட்டில் நாளை தினகரன்- ஜெ.தீபா போட்டி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசை கண்டித்து ஈரோட்டில் நாளை தினகரன் மற்றும் ஜெ.தீபா போட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
ஈரோட்டில் நாளை தினகரன்- ஜெ.தீபா போட்டி ஆர்ப்பாட்டம்
Published on

ஈரோடு:

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சி, பொது அமைப்பினர், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முதல்கட்டமாக தஞ்சையில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பின்னர் திருச்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதை தொடர்ந்து 3-வது கட்டமாக காவிரி பாயும் மாவட்ட தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

அதன்படி நாளை (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.தலைமை தாங்குகிறார். மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்.

முன்னாள் அமைச்சரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில்பாலாஜி முன்னிலை வகிக்கிறார். மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இதேபோல் ஜெ.தீபாவும் ஈரோட்டில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.

நாளை காலை 11 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் முன்பு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். அவருடன் ஜெ.தீபா பேரவை நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com