பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும்: மத்திய மந்திரி தகவல்

பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்ததின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும் என மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்
பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறையும்: மத்திய மந்திரி தகவல்
Published on

ஆமதாபாத்:

மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், ஆமதாபாத் நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 20 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை சர்வதேச சந்தையின் நிலவரத்தை பொறுத்தே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இது புதிது அல்ல.

தற்போது, அமெரிக்காவை புயல் தாக்கியதன் காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்தது. இதில் விலை குறைவு ஏற்பட்டால், இங்கேயும் குறையும்.

கடந்த 3 தினங்களாக சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. எனவே விரைவில் இவற்றின் மீதான விலை குறையும். பெட்ரோலியப் பொருட்கள் சரக்கு சேவை வரி விதிப்பின் கீழ் விரைவில் கொண்டு வரப்படும் என்று நம்புகிறேன். இதை அனைத்து மாநிலங்களின் சம்மதத்துடன் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விலை உயர்வை தடுக்க பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுமா? என்று அவரிடம் நிருபர்கள் எழுப்பினர். அதற்கு அவர், “வரி குறைப்பு செய்யப்படமாட்டாது. ஏனென்றால் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நலத்திட்டங்களுக்காக தேவைப்படும் நிதி வரிகள் மூலம்தான் திரட்டப்படுகிறது” என்று பதில் அளித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com