

புதுடெல்லி:
மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கூனில் நடைபெற்றுவரும் சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்றோடொன்று இணைக்கப்பட்டும், சார்ந்தும் இயங்கிவரும் இன்றைய உலகம் சர்வதேச அளவில் பல சவால்களை எதிர்த்து போராடி வருகிறது. தீவிரவாதம் முதல் பருவநிலை மாற்றம்வரை நாம் சந்தித்துவரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆசியாவின் பழங்கால பாரம்பரியமான பேச்சுவார்த்தை அல்லது விவாதத்தின் வாயிலாக தீர்வு காணலாம் என நான் நம்புகிறேன்.
சர்ச்சைகளை தவிர்க்கவும் நமது கண்ணோட்டங்களை பதிவு செய்யவும் ‘தர்க்க சாஸ்திரம்’ என்ற பாரம்பரியமிக்க வழிமுறைகளை நாம் கையாண்டு வந்துள்ளோம். பழம்பெருமை மிக்க இந்திய பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்தின் வாயிலாக பல்வேறு சிரமமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டுள்ளனர்.
ராமர், கிருஷ்ணர், புத்தர், பிரஹலாதன் ஆகியோரின் செயல்பாடுகள் தர்மத்தை நிலைநிறுத்துவதாகவே அமைந்திருந்தது. இதை இந்தியர்கள் பன்நெடுங்காலமாக கடைபிடித்து வந்துள்ளனர்.
பிரிவினைவாதம் மூலம் வகுப்புவாரியாகவும், நாடுவாரியாகவும் உலகத்தை பிளவுப்படுத்த சர்ச்சை விதைகளை தூவும் சக்திகளை வேரறுத்து வெற்றிகொள்ள பேச்சுவார்த்தை ஒன்றே வழியாகும்.
இயற்கையை பாதுகாக்க மனிதன் தவறிவிட்டால் மனிதனை பாதுக்க முடியாதவாறு இயற்கை மாறிவிடும். இதுவே பருவநிலை மாற்றமாகி விடுகிறது. இயற்கை வளங்களை சுரண்டி அழிக்க மட்டுமே நினைத்து விடாமல் இயற்கையோடு இணைந்து அதை பாதுகாக்க மனிதர்கள் முன்வர வேண்டும்.
இந்த நவநாகரிக உலகத்திலும் இயற்கை விதிகளோடு நல்லுறவுடன் ஒன்றிணைந்து, உளச்சான்றின்படி இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க நாம் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.