

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள்தான் என்றும், எனவே ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க தங்களுடைய அனுமதியை பெற வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் ஏற்கனவே கூறி உள்ளனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் வாரிசு என்று தனக்கு சான்றிதழ் வழங்க கோரி தீபக், சென்னை மயிலாப்பூர் தாசில்தாரிடம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முகவரியில், தான் தியாகராயநகரில் வசிப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.